செங்கல் லோடுக்கு 3000, ஜல்லி ரூ.700 குறைகிறது – ஜெ. நடவடிக்கை

தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் ரத்தினசேகர் சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்தார்

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் ரத்தினசேகர் சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்தார்.அப்போது, பொது மக்களுக்கு சிரமமின்றி சரியான விலையில் செங்கல் கிடைத்திட முதல்-அமைச்சரின் முந்தைய ஆட்சி காலத்தில் (2001-2006) வருடாந்திர கட்டண முறை கொண்டுவரப்பட்டது.
அதே போன்று தற்போது ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் கட்டும் முறையை மாற்றி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மொத்தமாக கட்டணம் செலுத்திட ஆவன செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கட்டுமானப் பொருள்களின் விலை அதிகமாக உள்ள நிலையில் செங்கல் விலை உயர்வு ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது என்றும், அதனால் பொது மக்களின் நலன் கருதி செங்கல் விலையினை குறைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
முதல்- அமைச்சரின் அறிவுரைக்கிணங்க செங்கல் விலையை தற்போதைய விலையிலிருந்து உடனடியாக லோடு ஒன்றுக்கு 3000 ரூபாய் அளவிற்கு குறைத்து கட்டுமானத் தொழில் வளர்ச்சிக்கும், அரசுக்கும் உறுதுணையாக இருப்பதாக தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் முதல்-அமைச்சரிடம் உறுதியளித்தார்கள்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்தார். அப்போது கல்குவாரிகளில் தற்போது நடைமுறையிலுள்ள நடை சீட்டு முறைக்குப் பதிலாக பரப்பளவு அடிப்படையில் ஆண்டு குத்தகைத் தொகை நிர்ணயம் செய்யவேண்டும் என்றும், இதன்மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் தொழில் செய்வதிலுள்ள சிரமங்கள் குறையும் என்றும் தெரிவித்தார்கள்.
மேலும், கல்குவாரிக்குத் தேவையான வெடிமருந்து பொருட்களை அரசு வெடி மருந்து நிறுவனத்திடமிருந்து முகவர் இன்றி மாவட்ட சங்கம் மூலம் கிடைப்பதற்கு ஆவன செய்யவேண்டும் என்றும் முதல்-அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.
கல் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கட்டுமானப் பொருள்களின் விலை அதிக அளவில் உள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி கருங்கல் ஜல்லி விலையினை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
முதல்-அமைச்சரின் அறிவுரைக்கிணங்க கருங்கல் ஜல்லி 40 மி.மி., 20 மி.மி., 12 மி.மி. மற்றும் 6 மி.மி. ஆகியவற்றின் விலையை தற்போதைய விலையிலிருந்து உடனடியாக லோடு ஒன்றுக்கு 700 ரூபாய் அளவிற்கு குறைத்து கட்டுமானத் தொழில் வளர்ச்சிக்கும், அரசிற்கும் உறுதுணையாக இருப்பதாக சங்கத்தினர் உறுதியளித்தார்கள்.

No comments:

Post a Comment