ரூ. 22 கோடியில் ஏரி, கால்வாய்களை புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

 ரூ. 22 கோடி செலவில் வோலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூவம் உப வடிநிலத்தின் கீழ் உள்ள ஏரிகள், கால்வாய்களை புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

மாநிலத்தின் பாசன நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள பாசனக் கால்வாய் அமைப்புகளைப் புனரமைத்து அவைகளை பழைய நிலைக்குக் கொண்டுவர, நீர்வள ஆதார தொகுப்புத் திட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

இதன் தொடர் திட்டமாக, உப வடிநில கட்டமைப்பு முறையில் பாசன சேவை மற்றும் வேளாண் உற்பத்தித் திறன் ஆகியவற்றை மேம்படுத்த ‘தமிழ்நாடு நீர்வள, நிலவளத் திட்டம்' ரூ. 2 ஆயிரத்து 547 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



இதன் ஒரு அங்கமாக, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூவம் உப வடிநிலத்தின் கீழ் உள்ள முறைசார்ந்த மற்றும் முறைசாரா ஏரிகள் மற்றும் கால்வாய்களை ரூ.22 கோடியே 40 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கூவம் வடிநிலம், கிராமப் பகுதி மற்றும் நகரப் பகுதி என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நகரப் பகுதி சென்னை மாநகர எல்லைக்குட்பட்டது.

கூவம் வடிநிலத்தில் 80 முறைசார்ந்த மற்றும் முறைசாரா பாசன ஏரிகள் உள்ளன. இவற்றில் பாசனப் பரப்பு கொண்ட 54 ஏரிகள் மற்றும் அதன் கால்வாய்களை புனரமைத்து நவீனமயமாக்க இந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் மதகுகளை மறுகட்டமைப்பு செய்தல், சீர்படுத்துதல், சிற்றணைகளை மறுகட்டமைப்பு செய்தல், சீர்படுத்துதல், ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்துதல், நீர்வழங்கும் கால்வாய்களைத் தூர்வாருதல் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனால், வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் வட்டம், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கடம்பத்தூர் மற்றும் பூந்தமல்லி வட்டங்களிலுள்ள 54 முறைசார்ந்த மற்றும் முறைசாரா ஏரிகளின் கீழ் உள்ள 6,624 ஹெக்டேர் ஆயக்கட்டு நிலங்களின் பாசன வசதி மேம்பாடு அடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment