தமிழகத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் அணை பாதுகாப்பு மசோதாவை திருத்த பிரதமருக்கு ஜெ. கடிதம்

 தமிழகத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் அணை பாதுகாப்பு மசோதாவை திருத்தக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:

நீர்வளத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா-2010-ல் அடங்கியுள்ள சில ஷரத்துகளைப் பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன். அவை தமிழ்நாட்டின் நலனுக்கு கேடு விளைவிப்பவையாகும்.

அந்த மசோதாவின் 26(1)-ம் பிரிவில், `குறிப்பிட்ட அனைத்து அணைகளும், எந்தெந்த மாநிலத்தில் இருக்கிறதோ, அந்தந்த மாநில அணை பாதுகாப்பு அமைப்பு அல்லது மாநில அணை பாதுகாப்புப் பிரிவின் அதிகார எல்லைக்கு அவை உட்பட்டவை.

அணைகள் சம்பந்தப்பட்ட அம்சங்களான, பாதுகாப்பு நிலை மற்றும் பழுது பார்த்து மேம்படுத்துவது, ஆய்வுகள், ஆய்வுத் தகவல்கள், அறிக்கைகள், பரிந்துரைகள் ஆகியவையும் இந்த அதிகாரத்துக்குள் வருகின்றன. எனவே அந்த அணையின் உரிமையாளரோ, வேறு மாநிலமோ, இந்த அமைப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் கூறப்பட்டுள்ள `அணை அமைந்துள்ள மாநிலம்' என்ற வார்த்தை, எந்த ஒரு அணையும், அது அமைந்துள்ள அடுத்த மாநிலத்தின் அணை பாதுகாப்பு அமைப்பின் அதிகார எல்லைக்குள் (எஸ்.டி.எஸ்.ஓ.) வந்துவிடும் என்பதை தெளிவாக்குகிறது.

மாநில அரசுக்குச் சொந்தமான அணையின் ஒரு பகுதி மற்ற மாநிலத்தின் எல்லையில் அமைந்திருக்கும் பட்சத்தில், அதன் உரிமையாளரான மாநிலம் மேற்கொள்ளும் அணை பாதுகாப்பு, செயல்பாடு, பராமரிப்பு நடவடிக்கைகளில் நேரடியாக தலையிடுவதுபோல் அமைந்துள்ளது.

முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் அணை, துனகடவு அணை, பெருவாரிபள்ளம் அணை ஆகிய 4 அணைகளும் கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ளன. அவை தமிழக அரசுக்கு சொந்தமானவை. அவற்றை தமிழக அரசு இயக்கி, பராமரித்து வருகிறது.

ஆனால் நாடாளுமன்றத்தில் இந்த அணை பாதுகாப்பு மசோதா-2010 நிறைவேற்றப்பட்டால், தமிழகத்துக்கு மிகப் பெரிய இடையூறை அது ஏற்படுத்திவிடும். ஏனென்றால், தமிழ்நாட்டுக்கு சொந்தமானவை என்றாலும், இந்த மசோதா மூலம் அந்த 4 அணைகளும் கேரளா அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். இதனால் அந்த அணையின் பாதுகாப்பு, இயக்கம், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்களை உருவாக்கிவிடும்.

எனவே இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மசோதாவில், சில திருத்தங்களையும், இணைப்புகளையும் கொண்டு வருவது அவசியம். அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருப்பதற்கான வாசகங்களை அதில் சேர்க்க வேண்டும். அதுபோல் 26(2)-ம் பிரிவையும், `மத்திய அணை பாதுகாப்பு அமைப்பு, மாநில அணை பாதுகாப்பு அமைப்பு அல்லது அணை பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி, முதலாம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட அணைகளை சோதனையிடவோ, தேவையான விசாரணை நடத்தவோ, அந்த அணையின் எந்தப் பகுதிக்கும், அணை அமைந்துள்ள எந்த இடத்துக்கும் தேவைப்பட்ட போதெல்லாம் செல்லலாம்' என்று மாற்றி அமைக்க வேண்டும்.

அதுபோலவே 26(3), 26(4)-ம் பிரிவுகளிலும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அணையின் பராமரிப்புப் பணியில் எந்தவொரு தலையீடும் இருக்கக் கூடாது என்பதற்காக 26(6) என்ற புதிய பிரிவை மசோதாவில் இணைக்க வேண்டும். `அணை பராமரிப்பு அதிகாரிகள், ஊழியர்கள் யாரும், வனம், வனச் சரணாலயம் ஆகிய பகுதிகளுக்கு அணை பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுபுணரமைப்பு பணிகளுக்காக செல்வதற்கு உரிமை உண்டு' என்ற அந்த ஷரத்தை இணைக்க வேண்டும்.

எனவே, இந்த கருத்துகளை சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் சொல்லி அணை பாதுகாப்பு மசோதாவில் தேவையான திருத்தங்கள், இணைப்புகளை செய்ய உத்தரவிட்டு, தமிழகத்தின் நலனை பாதுகாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

இதற்கிடையே, படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் இனத்தவரை எஸ்.டி. இனத்தவர் (பழங்குடியினர்) என்ற பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை, நிலுவையில் இருக்கிறது.

1931-ம் ஆண்டில் படுகர் இனத்தவர், பழங்குடியினர் என்று பட்டியலிடப்பட்டனர். அவர்களின் வாழ்க்கைத் தரம், சிறப்புத் தன்மைகள், வேற்றுமையான கலாசாரம், கூச்சத்தினால் மற்ற சமுதாயத்திடம் இருந்து விலகியிருக்கும் தொடர்பற்ற தன்மை, தனிப்பட்ட வாழ்க்கை முறை, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பிற்பட்ட நிலை ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து, எனது முந்தைய ஆட்சி காலத்தில் 5.9.03 அன்று மத்திய மலைவாழ் பழங்குடியினர் விவகாரத் துறைக்கு கடிதம் எழுதினேன்.

இந்த கோரிக்கையை மீண்டும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நீலகிரி மாவட்ட படுகர் இனத்தவர் என்னை கேட்டுக் கொண்டனர். தோடர்கள் உள்ளிட்ட பல்வேறு மலைஜாதியினருடன் படுகர் இனத்தவர்கள், பல நூற்றாண்டுகளாக நீலகிரி மலைப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் என்பது, படுகர் இனத்தவர் தாக்கல் செய்துள்ள ஆதாரங்களின் மூலம் தெரிய வருகிறது.

படுகர்கள் அவர்களுக்கென்று சொந்தமான பாரம்பரியம், கலாசாரத்தைக் கொண்ட, இனம், மொழி வாரியான சிறுபான்மையினர்தான். அவர்களின் பேச்சு மொழியும், நம்பிக்கை மற்றும் இறை வழிபாட்டு நடவடிக்கைகள் போன்றவை, அவர்கள் நீலகிரியோடு தொடர்பு கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

பழங்குடியினர் என்ற தன்மை, தற்போது பழங்குடியினத்தவர் பட்டியலில் இருக்கும் பல இனங்களிடம் இருக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அரசுகள் கொண்டு வந்த நல்ல திட்டங்களினால் அப்படிப்பட்டவர்களின் நிலை மேம்பட்டுள்ளது. அதுபோலவே படுகர்கள் இனத்துக்கு அதுபோன்ற மேம்பாடு தேவைப்படுகிறது.

பழங்குடியினர் என்ற பட்டியலில் இடம் பெறுவதற்கு படுகர்கள் தகுதியானவர்கள்தான் என்பதில் திருப்தி நிலை நிலவுகிறது. எனவே பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment