டெல்லியில் நடந்த அத்வானி யாத்திரை நிறைவு கூட்டத்தில் அதிமுக பங்கேற்பு

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரை நிறைவையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்றுநடந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பிரநிதியாக தம்பித்துரை எம்.பி கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது.


பாஜக மூத்த தலைவர் அத்வானி 38 நாள் ரதயாத்திரையை நாடு முழுவதும் மேற்கொண்டார். இதன் நிறைவு விழா இன்று டெல்லியில் நடந்தது. அங்குள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில்அத்வானி பேசினார்.

இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதேபோல அதிமுகவின் தம்பித்துரையும் அங்கு வந்திருந்தார்.இது அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது.

பாஜகவுக்கு தமிழகத்தில் வாழ்க்கை கொடுத்தது அதிமுகதான். ஆரம்பத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக பின்னர் திமுகவிடம் போனது. பின்னர்இரு கட்சிகளாலும் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று நடந்த அத்வானி கூட்டத்திற்கு தம்பித்துரை வந்திருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இரு கட்சிகளும் மீண்டும் நெருங்கி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு துளிர்க்க ஆரம்பித்துள்ளதற்கான அடையாளம் இது என்றும் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment