உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3,053 கோடி நிதி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு

அனைத்து ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மாநில நிதி ஆணைய மானியமாக ரூ.3 ஆயிரத்து 53 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரம் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது ஊரக வளர்ச்சி என்பதால், கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.



அந்த வகையில், ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குக்கிராமங்களை சென்றடைய வேண்டும். கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களை நோக்கி செல்வது முழுவதுமாக தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், புதிதாக தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய்) என்ற ஒரு திட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார்.

அனைத்து ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மாநில நிதி ஆணைய மானியமாக 3 ஆயிரத்து 53 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயினை விடுவித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிதியில் இருந்து ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.25,000 வீதம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் விடுவிக்கப்படும். ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.2,50,000 வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.30 லட்சம் நிதி விடுவிக்கப்படும். இது மட்டுமின்றி பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து ஊரக அமைப்புகளுக்கான மாநில நிதி ஆணைய மானியம் மக்கள் தொகைக்கு ஏற்ப விடுவிக்கப்படும்.

முதல்வரால் மாநில நிதி ஆணைய மானியமாக ஊராட்சி அமைப்புகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ள ரூ.3 ஆயிரத்து 53 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரத்தில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக செலவுகள், குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், அடிப்படை வசதிகளை பராமரித்தல், வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் தமிழக குக்கிராமங்களின் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கு செலவிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment