இலங்கை கடற்படையினரின் தாக்குதல் இந்தியாவின் மீதான தாக்குதலுக்கு சமம்: ஜெ.

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக மத்திய அரசு கருத வேண்டும். இது உள்ளூர் பிரச்சினை அல்ல, தேசியப் பிரச்சினை. எப்படி பாகிஸ்தான் படையினர் எல்லைப் பகுதியில் தாக்குவதை மத்திய அரசு சீரியஸாக கருதுகிறதோ, அதே போல இலங்கைப் படையினரின் தாக்குதலை மத்திய அரசு இனியாவது கருத வேண்டும். இலங்கைக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய வெளியுறவுச்செயலாளர் ரஞ்சன் மத்தாயிடம் கண்டிப்பு கலந்த குரலில் கூறியுள்ளார்.

வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் 3 நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வழக்கமாக இதுபோல இலங்கை போகும் முன்பு தமிழக முதல்வரை 'பார்மாலிட்டி'க்காக சந்திப்பது கடமை. அந்த வகையில் சென்னை வந்த மத்தாய் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மாத்தாயுடனான சந்திப்பின்போது முதல்வர் ஜெயலலிதா புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 5 மாதங்களாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல் சம்பவங்களை தொகுத்து எடுத்துரைத்தார்.

கடந்த ஜுன் மாதம் 2ம் தேதி அன்று இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்ததாக கூறி 4 மீனவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்றும், அதுபோன்று 20ம் தேதி 23 மீனவர்களை பிடித்து 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர் என்றும், ஜுலை 4ம் தேதி நாட்டுப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த 14 மீனவர்களை பிடித்தனர் என்றும் கூறினார்.

பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் பிடித்து துன்புறுத்திய பல்வேறு சம்பவங்களையும் முதல்வர் ஜெயலலிதா நினைவுகூர்ந்தார். இந்த ஆண்டு கடந்த மே மாதம் தொடங்கி இதுவரை இதுபோன்று 14 சம்பவங்கள் நடந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தமிழக மக்கள் என்று பார்க்காமல் இந்திய குடிமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாக பார்க்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான ஆக்ரோஷமான தாக்குதலை இந்தியாவுக்கு எதிரான தாக்குதலாக கருத வேண்டும். அதுமட்டுமின்றி தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை, பாகிஸ்தான், சீன எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது அந்த நாடுகளின் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவத்தை போன்று கருத வேண்டும்.

மேலும், இந்த பிரச்சனையை தமிழகத்தின் தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்காமல் தேசிய பிரச்சினையாக பார்க்க வேண்டும். இந்த தாக்குதல் சம்பவங்கள் பெரும்பாலும் ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட கடலோர பகுதிகளில்தான் நடக்கின்றன. இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களையும், பிடித்து வைத்துள்ள மீன்களையும் பறித்து கொள்கிறார்கள்.

இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு அப்பால் உள்ள கடல்பகுதியில் உன்னிப்பாக கண்காணித்து அந்த பகுதியில் வரும் படகுகளை குறிவைத்து தாக்குகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இலங்கை கடற்படைக்கு தெரிந்தே நடக்கின்றன என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். மேலும், இலங்கை மீனவர்கள் என்ற போர்வையில் தமிழக மீனவர்களை தாக்கி வருவது இலங்கை கடற்படையினர்தான் என்றும் அவர் கூறினார்.

நீண்ட தூரம் செல்ல தேவைப்படும் டீசலை எடுத்துச்செல்ல முடியாத சிறிய படகுகளில்கூட இலங்கை கடற்படையினர் வந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது முக்கியமான விஷயம் ஆகும். கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமைகளை அனுபவிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

வெளியுறவுத்துறை செயலாளர் தனது இலங்கை பயணத்தின்போது இந்த பிரச்சனைகளை எல்லாம் இலங்கை அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். மேலும், இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வழிவகை செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசிடம் வலியுறுத்துமாறும் முதல்வர் ஜெயலலிதா வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாயிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது வெளியுறவுத்துறை இணைச்செயலர் எச்.வி.சிரிங்லா, வெளியுறவுத்துறை செயலாளர் அலுவலக இயக்குனர் சஞ்சீவ் சிங்லா, தமிழக அரசின் தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி ஆகியோர் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சூடாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள நிலையில் இப்போதாவது மத்திய அரசுக்கு உறைக்குமா, இலங்கையை கடுமையாக எச்சரிக்குமா, நமது கடற்படையினரை தமிழக மீனவர்களைப் பாதுகாக்க பயன்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment