'சாலை விபத்து விசாரணை வழிமுறை' திட்டம்: முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்

 'சாலை விபத்து விசாரணை வழிமுறை' என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார். சாலை விபத்து விசாரணைக்கு உதவியாக இருக்கும் நவீன கருவிகளையும், வாகனங்களையும் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு அவர் வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை, உலக வங்கி திட்டத்தின் கீழான தமிழ்நாடு நகர வளர்ச்சி திட்ட நிதியின் மூலம் சாலை விபத்து விசாரணை வழிமுறை என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


இந்த வழிமுறையானது, துல்லியமான பூகோள நிலைப்பாடு விவரங்கள் (ஜி.பி.எஸ். டேட்டா) அடங்கிய விபத்து நடந்த சம்பவ இடத்தின் படத்தை பிடிக்கக்கூடிய கையடக்க கருவியின் உதவியுடன் செயல்படுகிறது. இதன்மூலம், அவசர காலப் பணிகளான ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் மருத்துவமனைகளுடன் விரைந்த ஒத்துழைப்புடன் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி மற்றும் சிகிச்சை அளிக்க உதவும்.

பதிவு செய்யப்பட்ட விபத்து விவரங்களை உபயோகித்து பூகோள தகவல் முறை உருவாக்கி அதன் மூலம் விபத்து விவரங்களை நகரத்தின் எண் வரைபடத்தில் (டிஜிட்டல் மேப்) குறிக்கப்பட்டு இந்த விவரங்களை ஆய்வு செய்து போக்குவரத்தினை திட்டமிடவும், நிர்வகிக்கவும் உபயோகிக்கப்படும்.

சாலை விபத்துக்களின் விசாரணைக்கும், நீதிமன்றங்களின் வாயிலான சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவி மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும். விபத்திற்கு முன்பும், பின்பும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை முழுமையாக இணைத்து செயல்படுவதுடன் மாநில போக்குவரத்து திட்ட பிரிவுக்கும் உதவிகரமான தொடர்பினை கொண்டு இருக்கும்.

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கென வேகக் கதிர் துப்பாக்கிகள் மற்றும் சுவாச ஆய்வுக் கருவிகள் ஆகியவை பொருத்தப்பட்ட காவல் இடைமறிப்பு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அதிகமான சாலை விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய அதிவேகம், குடி போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து குற்றங்களைக் கண்டு பிடித்தல் மற்றும் தடுத்தல் மூலம் சாலை விபத்துக்களை தவிர்த்திடவும் விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும் பயன்படும்.

மேற்கண்ட சாலை விபத்து விசாரணை வழிமுறை மற்றும் காவல் இடைமறிப்பு வாகனங்கள் ஆகிய இரண்டு திட்டங்களும் தனியார் நிறுவனத்தின் மூலம் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சாலை விபத்து விசாரணை வழிமுறையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். துல்லியமான பூகோள நிலைப்பாடு விபரங்கள் அடங்கிய விபத்து நடந்த சம்பவ இடத்தின் படத்தை பிடிக்கக்கூடிய கையடக்ககருவிகளையும், புதிய இடைமறிப்பு வாகனங்களையும் போக்குவரத்து காவல்துறையினருக்கு அவர் வழங்கினார். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகளையும் வாகனங்களையும் நல்ல முறையில் பயன்படுத்தி சாலை விபத்துக்களை தடுத்து பொது மக்களுக்கு சிறப்பான வகையில் பணியாற்ற வேண்டும் என்று போலீசாருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா, டி.ஜி.பி. ராமானுஜம், போலீஸ் கமிஷனர் திரிபாதி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment